மானிட சக்தி – பாரதிதாசன் கவிதை

மானிடத் தன்மையைக் கொண்டு – பலர்
வையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டு
மானிடத் தன்மையை நம்பி – அதன்
வன்மையினாற்புவி வாழ்வுகொள் தம்பி!
‘மானிடம்’ என்றொரு வாளும் – அதை
வசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும்
வானும் வசப்பட வைக்கும் – இதில்
வைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும் (மானிட)
மானிடன் வாழ்ந்த வரைக்கும் – இந்த
வையத்திலே அவன் செய்தவரைக்கும்
மானுடத் தன்மைக்கு வேறாய் – ஒரு
வல்லமை கேட்டிருந்தால் அதைக் கூறாய்!
மானிட மென்பது புல்லோ? – அன்றி
மரக்கட்டை யைக்குறித் திடவந்த சொல்லோ?
கானிடை வாழ்ந்ததும் உண்டு – பின்பு
கடலை வசப்படச் செய்ததும் அதுதான்! (மானிட)
மானிடம் போற்ற மறுக்கும் – ஒரு
மானிடம் தன்னைத்தன் உயிரும் வெறுக்கும்;
மானிடம் என்பது குன்று – தனில்
வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று
மானிடருக் கினி தாக – இங்கு
வாய்த்த பகுத்தறி வாம்விழி யாலே
வான்திசை எங்கணும் நீ பார்! – வாழ்வின்
வல்லம ‘மானிடத் தன்மை’ என்றேதேர். (மானிட)